"கஜா புயலும் - 20 தொகுதி இடைத்தேர்தலும்” - அரசியல் கட்சிகளின் பண்பு-அடுத்த கட்ட நடவடிக்கைகள்-நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல்-தூர்வாருதலின் முக்கியத்துவம்:
1. புயலின் போதும், புயலுக்குப் பிறகும் ”மக்கள் நிம்மதியாக உறங்கவேண்டும் என்பதற்காக உறங்காமல் செயல்பட்ட” தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். இதுபோல் பொறுப்போடும்,விழிப்போடும், திட்டமிடுதலோடும் ஒவ்வொரு பொதுப்பிரச்னைகளையும் ஆளுங்கட்சி அணுகினால் சிறப்பாக இருக்கும். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை,காவல்துறை,சுகாதாரத்துறை,மின்சாரத்துறை,வானியல் அறிவிப்பு மையம் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
2. புயலை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்த முன்னெசரிக்கை நடவடிக்கைகளுக்கு திமுக,பா.ம.க,காங்கிரஸ்,பா.ஜ.க,மார்க்சிஸ்ட்,மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்தது தமிழகம் அதிகம் கண்டிராத அரசியல் பண்பு, நாகரீகம். அனைத்துப் பிரச்னைகளிலும் இப் பண்பு தொடரட்டும்.
3. பேரிடரின் நிலையில் மூன்று R சொல்வார்கள். Rescue,Relief,Rehabilitation( மீட்பு, நிவாரணம்,மறுவாழ்வு). இதில் தொடக்கநிலையில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டிருப்பதை பாராட்டவேண்டும். அதேபோல், நிவாரணம், மறுவாழ்வு என அடுத்த இரு முக்கிய கட்டங்களிலும் இதோபோல் செயல்படவேண்டும் அரசு. செய்யுமா ? புயலின் மொழியில் சொல்லவேண்டுமானால், தலைப்பகுதியை முடிந்தவரை நன்றாக சமாளித்துவிட்டோம், கண் பகுதி-வால்பகுதியை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
4. மழை என்றால் பாதிப்பு என்று மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டோம்(2015ல் 1940கோடி). அடுத்த ஆண்டே வரலாறு காணாத வறட்சி என்று நிவாரணம் கேட்டோம்(2016ல் 1700கோடி). காரணம்..? ஏரி,குளம், நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, தூர்வாராமை, ஊழல்... மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படாமை, அதில் நடைபெறும் ஊழல். இதுபோன்ற நீண்டகாலமாக “சீரழிக்கப்பட்டு” , கண்டுகொள்ளாமல் இருக்கும் விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்தவேண்டும். செய்யுமா அரசு..?
5. தமிழகத்தில் 10 தொகுதியோ, 20 தொகுதியோ அடிக்கடி காலியா இருந்து, இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற ”கழுத்துக்கு மேல்” கத்தி தொங்கும் நிலை எப்போதும் இருந்தால், ஆளுங்கட்சியானது “கஜா” புயலை எதிர்கொண்டதுபோல் பொறுப்போடும், விழிப்போடும், சுறுசுறுப்போடும் செயல்படுமோ..?
No comments:
Post a Comment