Monday, 29 July 2019

காங்கிரஸ் எம்.எல்.ஏ... ஆனால்...பா.ஜ.க. மந்திரி..??

காங்கிரஸ் எம்.எல்.ஏ பா.ஜ.க மந்திரியாக தொடர்வது எப்படி..? ...... செந்தில் ஆறுமுகம்,29/07/2019




கவர்னரைப் பார்த்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் அளித்த 18 எம்.ஏ.க்கள் தமிழகத்தில் தகுதி நீக்கம்..
தூண்டுதல் ஏதுமின்றி “சுயமாக சிந்தித்து” ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, “சுயமாக தனிவிமானம்” ஏறி மும்பையில் அடைக்கலமான
17 கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்..!!
ஆனால், மணிப்பூரில் 2017ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை இல்லை என்றாலும்
தனது “தனித் திறமையைக்” காட்டி ஆட்சி அமைத்தது பா.ஜ.க. அப்போது பா.ஜ.க.வுக்குத் தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ
ஷ்யாம்குமாருக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது(நகராட்சி நிர்வாகம்,வீட்டுவசதித்துறை
என்ற பசையான துறை..!!).
காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்யவில்லை; தேர்தலை சந்திக்கவில்லை;
நேரடியாக ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஆளும் பி.ஜே.பியின் அமைச்சராகிறார். இது அப்பட்டமான கட்சித் தாவல் என்று
சபாநாயகரிடம் புகார் அளித்தது காங்கிரஸ். இதுநடந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டது.
புகார் மீது இன்றுவரை, சபாநாயகர் "தகுதி நீக்க" நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்தான வழக்கு, மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது .
ஷ்யாம்குமார் அமைச்சராகத் தொடர்கிறார். இன்னும் 2.5 ஆண்டுகள் கடத்தினால் ஆட்சிகாலமே முடிந்துவிடும்.
மணிப்பூர் சட்டசபை இணையதளத்தில் இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
சட்டசபையில் எதிர்கட்சி வரிசையில் அமர்கிறார். ஆனால், ஆளும் பா.ஜ.க.வின் முக்கிய அமைச்சர்..!!??
ஒருவேளை, வடகிழக்கு மாநிலங்களுக்கு “கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்கு” சிறப்பு விலக்கு இருக்குமோ..??!!??
பேசாமல், கட்சித் தாவல் தடைச்சட்டம் என்பதை “சபாநாயகர் விருப்பு-வெறுப்புச் நீக்கல் சட்டம்” என்று மாற்றிவிடலாம்..!!

Monday, 22 July 2019

கவிழும் கர்நாடக அரசு..

கவிழும் கர்நாடக அரசு..!!
... செந்தில் ஆறுமுகம், ஜீலை 2019

”ஆபரேசன் கமலா” ”ஆயிரம் கோடி”, ”தனி விமானம்”, ”சொகுசு விடுதி”, ”ஆம்னி பஸ்” ”எம்.ஏல்.ஏவின் விலை என்ன” ” வாய்ச்சவடால் சபாநாயகர்” ... கர்நாடகத்தில் இன்று அதிகம் பேசப்படும் வார்த்தைகளின் பட்டியலில் இருந்து எடுத்த சாம்பிள்கள் இவை...!!

யார் வெல்வார்கள் என்பதை இறுதிவரை யூகிக்கமுடியாத அளவுக்கு நடந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தைப்போல் பரபரப்பும்,திருப்பங்களும் நிறைந்ததாய்த் தொடர்கிறது கர்நாடக அரசியல் நிலவரம். கடந்த ஆண்டு 224 தொகுதி சட்டமன்றத் தேர்தலின் மூலம் வாக்குச்சாவடியில் தொடங்கிய ஜனநாயகப் பயணம் இன்று சொகுதிவிடுதிகளில் சிறைவைக்கப்பட்டிருக்கிறது. ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16பேர் ராஜினாமா செய்துவிட்டு மும்பை சொகுசு விடுதியில் அடைக்கலமாகியுள்ளனர். காங்கிரஸ், ம.ஜ.த, பா.ஜ.க, வின் எம்.எல்.ஏக்கள் தங்கள் கூட்டைவிட்டுப் பறந்துவிடக்கூடாது என்பதற்காக பெங்களூருவில் சொகுசு விடுதிகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது அவ்வளவு நம்பிக்கை..!! இப்படிப்பட்ட ”பறக்கும் குணம்” படைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்கியது யார்..? இன்று ஒவ்வொரு சொகுதி விடுதியின் முன்பும் நின்று காவல் காக்கும் அதே கட்சித் தலைவர்கள்தானே..?

கடந்த ஆண்டு 105 இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக 79 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியானது 37 இடங்களை மட்டுமே வென்ற ம.ஜ.த. கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த போதே(!!) இந்த ஆட்சி நீண்டகாலம் நிலைக்காது என்பது முடிவாகிவிட்டது. எதிரெதிர் கட்சியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது என்பதே தார்மீக ரீதியில் மக்களுக்குச் செய்யும் துரோகம். அதிலும், சட்டமன்றத் தேர்தலில் 18% வாக்குகளை மட்டுமே பெற்ற ம.ஜ.த. கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுவது என்பது எந்தவகையிலும் நியாயமில்லை. இருந்தபோதும், இதுபோன்ற முரண்பாடு மிக்க கூட்டணிகள் அமைவதைத் தடுக்கவும், ஓட்டுக்களின் மூலம் மக்கள் ஒதுக்கிய ஒருவர் பின்வாசல் வழியாக முதல்வர் ஆவதைத் தடுக்கவும் அரசியல் சாசனத்தில் எந்த வழியும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. நம் அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கர் உள்ளிட்டோர் இவ்வளவு தரக்குறைவான நிலையை நோக்கி நம் ஜனநாயகம் செல்லாது என்று நினைத்தார்களோ என்னவோ..?

“கட்சித் தாவல் தடைச் சட்டம்”, சட்டசபை விதிமுறைகள் போன்றவற்றை தங்கள் வசதிக்கேற்ப தமிழக சபாநாயகர் பயன்படுத்திக்கொண்டார்; கட்சி மாறி வாக்களித்தவர்கள் மீதுகூட இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்தான வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கர்நாடகத்திலும் சபாநாயகர் மீதும் இதேபோன்றதொரு குற்றச்சாட்டுதான். ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 8 பேரின் கடிதம் “முறையான வடிவத்தில்” இல்லை, அதனால் ராஜினாமாவை ஏற்க இயலாது என்று கர்நாடக சபாநாயகர் ஒரே போடாகப் போட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கர்நாடக சட்டசபை விதிமுறையின் பிரிவு 202(உட்பிரிவு1ன் படி) எம்.எல்.ஏ. ஒருவர் ராஜினாமா செய்வதற்கு கொடுக்கப்படவேண்டிய கடிதத்தில் இருக்கவேண்டிய வரிகள் இது மட்டும்தான்... “I hereby tender my resignation of my seat in the house with effect from......" ... இந்த வடிவத்தில் 8 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுக்கவில்லையாம்..!! நம்பும்படியாகவா இருக்கிறது..?

ஒருவேளை ராஜினாமா கடிதத்தில் ராஜினாமாவிற்கான காரணத்தை 8பேரும் எழுதி இருந்தார்கள் என்ற காரணத்தை சபாநாயகர் முன்வைத்தாலும், அதுவும் எடுபடாது. ( கர்நாடக சட்டசபை விதிமுறையின்படி, காரணத்தை ராஜினாமா கடிதத்தில் எழுதக்கூடாது..) ஏனென்றால், அப்படி காரணத்தை எழுதி இருந்தால் கூட அதுகுறித்தான விவரத்தை சட்டசபையில் படித்துக்காட்டக்கூடாது என்றுதான் விதி இருக்கிறதே தவிர, இதற்காக ராஜினாமாவை ஏற்கமுடியாது என்று சொல்ல சபாநாயகருக்கு உரிமை இல்லை...!! மொத்தத்தில், ராஜினாமா விவகாரத்தை இழுத்தடித்து , அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த ஆளுங்கூட்டணிக்கு அவகாசம் வேண்டும். அதற்கு சபாநாயகர் மறைமுகமாகத் துணைபோகிறார். எந்தக் கட்சியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும், நடுநிலையோடு – சட்ட விதிமுறைகளின்படி செயல்பட வேண்டிய சபாநாயகர் , விதிமுறைகளின் சந்துபொந்துகளில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமையைப் பறிப்பது நியாயமில்லை…!! இது ஜனநாயகத்திற்கு நல்லதில்லை..!!

சபாநாயகரின் போக்கு இப்படி என்றால், தேவகவுடா குடும்ப உறுப்பினர்களின் போக்கும் கர்நாடகக் குழப்பத்திற்கு காரணமாக இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. தேவேகவுடாவின் ஒரு மகன் குமாரசாமி முதல்வராகவும். இன்னொரு மகன் ரேவண்ணா பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்து கொண்டு ஆட்சியில் கோலோச்சுவதை காங்கிரஸ்காரர்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. பல்வேறு துறைகளில் நடக்கும் திட்டங்களில் செலவிடப்படும் தொகையில் காங்கிரசாருக்கான “பங்கு’ முறையாகக் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏக்களை மும்பையில் வைத்து ”முறையாகப்” பாதுகாப்பது பா.ஜ.க.தான் என்று பேசப்படுகிறது. இதற்கு சமீபத்திய சாட்சி, காங்கிரசின் எம்.எல்.ஏ. எம்.டி.பி.நாகராஜ் விவகாரம். ராஜினாமா செய்தார். மும்பை சென்றார். திரும்பி வந்தார். முந்தைய நாள், ராஜினாமாவை திரும்பப் பெற்றுக்கொள்வேன் என்று சொன்னார். அடுத்தநாளே தனிவிமானத்தில் மும்பை பறந்தார். விமான நிலையத்தில் அவரோடு இருந்தவர் பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகியான அசோகா.!!. இதுகுறித்தான காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பாகி ஆட்சி அமைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் பகீரத முயற்சிகளை அம்பலப்படுத்தின !! நீங்கள் ஆட்சி அமைக்கக் கோருவீர்களா என்று எதியூரப்பாவிடம் கேட்டபோது “…நாங்கள் என்ன சன்னியாசி மடமா நடத்துகிறோம்” என்று பதிலளித்தார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு மும்பை சொகுசு விடுதி, சொகுசு வசதி, தனிவிமான வசதி என நடக்கும் அனைத்து விஷயங்களும் எதியூரப்பாவின் பதிலுக்கு உதாரணங்களாக நிற்கின்றன. பா.ஜ.க.வின் இந்தப்போக்கு கர்நாடகாவில் மட்டுமல்ல கோவா, மேற்குவங்கும் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்வதைப் பார்க்கிறோம். கோவாவில் கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு வந்தவர்களுக்கு உடனடியாக மந்திரி பதவி வழங்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் 107 எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வரவிருக்கிறார்கள் என மேற்குவங்க பா.ஜ.க. நிர்வாகியும், மம்தா பானர்ஜிக்கு முன்னாளில் வலதுகையாக இருந்த முகுல்ராய் அறிவிக்கிறார். அப்பட்டமான ஜனநாயக விரோதப் போக்குகள் அன்றாட நிகழ்வுகளாகின்றன. கேள்வி கேட்கத்தான் ஆளில்லை..!!

வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு தங்களுக்கு நல்லாட்சியை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்த மக்களின் மனநிலையை யோசித்துப் பார்க்கிறேன். அங்குள்ள கிராம மக்கள், விவசாயிகளின் எண்ண ஓட்டம் எப்படியிருக்கும் என எண்ணிப்பார்க்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் தேஷ்பாண்டே வெளியிட்ட ஒரு அறிவிப்பு குறிப்பிடத்தக்கது. ”…மாநிலத்திலுள்ள 30 மாவட்டங்களில் 16 மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் “நிரந்தர வறட்சியை எதிர்நோக்கும்” 24 மாவட்டங்களின் பட்டியலில் இந்த 16 மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளது. ராஜாஸ்தானை விட சில மாவட்டங்களில் வறட்சி அதிகமாகவுள்ளது” என்றார்.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இப்படிப்பட்ட ”வறட்சி” மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு மக்கள் நலப்பணிகளைக் கவனித்திருக்க வேண்டும். மாநிலமே “வறட்சியில்” இருந்தாலும் பரவாயில்லை தங்களை “வளப்படுத்திக்” கொண்டால் போதும் என்று அணிமாறுகிறார்கள் எம்.எல்.ஏக்கள். இதைப் பார்க்கும்போது, தவறாகத் தேர்ந்தெடுத்துவிட்ட எம்.எல்.ஏ.க்களை பதவியிறக்க தங்களுக்கு அதிகாரம் ஏதும் இல்லையே என்று மக்கள் புலம்புவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்..?

மேலும், பட்ஜெட்டிற்குப் பிறகான முக்கிய நிதிமசோதாக்கள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிதி ஆண்டிற்கான துறை ரீதியான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளே இன்னும் முடியவில்லை. ஆனால், சட்டசபையில் தற்போதைய கவனம் எல்லாம் “நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு” எடுக்கப்படுமா.. இல்லை “நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு” நடத்தப்படுமா என்பதிலேயே இருக்கிறது.

வெற்றிக்குப் பல தந்தைகள் உண்டு; தோல்வி என்றுமே அனாதைதான் என்பார்கள். அதுபோல, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் பெருந்தோல்வி, ராகுலின் ராஜினாமா போன்றவை இப்பிரச்னைகள் வேகமாக வெடிப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் மாந்திரீகம் செய்து ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சத்தில் எலுமிச்சம்பழத்தை கர்நாடக சட்டமன்ற வளாகத்திற்குள் கொண்டுசெல்லத் தடைவிதிக்கிறார்கள். ஆட்சிக் கட்டில் மீது அவ்வளவு ஆசை கொண்ட ஆட்சியாளர்களுக்கு, இந்த ஆட்சியே மக்கள் நலனுக்குத்தான், அவர்களின் வளர்ச்சிக்குத்தான் என்ற சிந்தனை துளியாவது இருந்திருந்தால் கர்நாடகாவில் இவ்வளவு குழப்பம் நடந்திருக்குமா..?

இதில் மிகவும் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால், எமர்ஜென்சியை எதிர்த்து நின்று ஜனநாயகத்தை தூக்கிப்பிடித்த ”லோக்நாயக்” ஜெயப்பிரகாஷ் நாராயணின் வழியைப் பின்பற்றி வந்த தேவேகவுடா, சித்தராமையா அவர்களின் கூட்டணி ஆட்சியில் இவ்வளவு “ஜனநாயகப் படுகொலைகள்” தொடர்வதுதான்..

Thursday, 27 June 2019

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து..

#கடல்_நீரை_குடிநீராக்கும்_திட்டம் .. செந்தில் ஆறுமுகம்
27-06-2019
1. வீட்ல கரண்ட் போனா, அவசரத்தேவைக்கு-கொஞ்ச நேரத்துக்கு UPS பயன்படுத்தலாம்..ஆனால், UPSஐ வைத்தே நாள் முழுதும் ஓட்டமுடியாதே Mr.EPS-OPS ??..!!
2. ஆண்டுக்கு சராசரியாக 911மி.மி மழைபெறும் தமிழகம்; தமிழக சராசரியைவிட கூடுதல் மழைபெறும் சென்னை; இப்படிப்பட்ட நிலையில் சென்னையின் நீர் தேவைக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிரந்தரமாக நம்பியிருப்பது நம்மிடம் முறையான நீர் மேலாண்மைத் திட்டம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது..
3. கடந்த ஆண்டு ஜீலை,ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகம் நமக்கு அனுப்பியிருக்க வேண்டிய காவிரி நீரின் அளவு 77 டி.எம்.சி.(ஜீலை-31, ஆகஸ்ட்-46) ; ஆனால், கர்நாடகாவில் கடும் மழைப்பொழிவு இருந்ததால், தமிழகத்திற்கு 301 டி.எம்.சி. நீரை அனுப்பியது(ஜீலை-125,ஆகஸ்ட்-176).. இதில் கணிசமான நீரை கடலில் விட்டது தமிழகம்..!! கடும் வறட்சியை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த ஆண்டும் இதேபோல் நடந்தால் ஆச்சர்யமில்லை. இதைக் காரணமாகப் பயன்படுத்தி, உங்களிடம் நீரைத் தேக்கத் திட்டமில்லை ஆகவே, மேகதாதுவில் அணைகட்டி நாங்கள் நீரை சேமித்து உங்களுக்குத் தருகிறோம் என்று வாதாடுகிறது கர்நாடகா.!!
4. முறையான மழைநீர் சேகரிப்பு, ஏரி-குளங்களை ஆழப்படுத்துதல்,அகலப்படுத்துதல்,ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மணல் திருட்டை கட்டுப்படுத்துதல்,புதிய நீர்தேக்கங்களை ஏற்படுத்துதல், நீர் சிக்கனம் குறித்த பெரும்விழிப்புணர்வு போன்ற நீண்டகால அடிப்படையில் நிரந்தரத் தீர்வைத் தரும் திட்டங்களை நோக்கி நகரவேண்டும் தமிழகம்.
RAIN Water is Permanent ;
RAIL Water is Temporary..!!
-செந்தில் ஆறுமுகம்

Thursday, 20 June 2019

ஒரே நாடு-ஒரே தேர்தல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

ஒரே நாடு-ஒரே தேர்தல் பற்றி...
செந்தில் ஆறுமுகம்

ஒரே நாடு- ஒரே தேர்தல்- அனைத்துக் கட்சிக் கூட்டம் -பார்வை:
அதிகாரப்பூர்வ எதிர்கட்சியே இல்லை என்ற அசுரபலத்தோடு வென்றிருக்கும் பா.ஜ.க. அனைத்துக்கட்சிகளைக் கூட்டி சில பொருள்களை விவாதிக்க எடுத்த முன்னெடுப்பு  வரவேற்புக்குரியது. ஆனால், 5 பிரச்னைகள் பற்றிப் பேச அழைக்கிறோம் என்று சொல்லிவிட்டு சர்ச்சைக்குரிய “ஒரே நாடு-ஒரே தேர்தல்” விவகாரத்தையும் அதில் இணைத்ததைத் தவிர்த்திருக்கவேண்டும். இப்போது பாருங்கள்... ஒரே தேர்தல் விவகாரத்தைத் தவிர்த்து காந்தியின் 150 வது பிறந்ததினம், சுதந்திர தினத்தின் 75ம் ஆண்டு,வடகிழக்கு பிராந்தியங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பிற 4 விஷயங்கள் பற்றி முடிவுகள்,விவாதங்கள் பொதுமக்களிடம் சென்று சேரவே இல்லை. ஒரே தேர்தல் என்பது குறித்து விவாதிப்பதற்குத்தான் இக்கூட்டம் கூட்டப்பட்டது என்ற பிம்பம்தான் உருவாகி நிற்கிறது. விவசாயம், வேலைவாய்ப்பு, கல்வி,தண்ணீர் பிரச்னை,இயற்கைவளங்களைப் பாதுகாத்தல் போன்ற பிரச்னைகளை முன்னிறுத்தி இருந்தால் இக்கூட்டம் ஆரோக்யமான போக்கை நோக்கிச் சென்றிருக்கும். பிரதான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்திருக்க முடியாது.

அதுவும், தமிழகத்தின் பிரதிநிதியை(சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை) கூட்டத்திற்குள் அனுமதிக்காத போக்கு தமிழகத்தின் மீதான பா.ஜ.க.வின் அலட்சிய/ஆதிக்கப் பார்வையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.  பா.ஜ.க. நம் மாநிலத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான் இக்கூட்டத்தின் மூலம் தமிழகத்தில் அதிகம் பரவிய கருத்தாக நிற்கிறது..!! ஆரம்பமே இப்படி இருப்பது சரியில்லை..!! அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்ற நோக்கம் நல்லதே..ஆனால், விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட பொருளான “ஒரே நாடு-ஒரே தேர்தல்” விவகாரம் கூட்டத்தின் நோக்கத்தை சிதைத்துவிட்டது. Meeting Over. Purpose not fulfilled. OPERATION SUCCESS..PATIENT DEAD..!!

எதிர்பார்ப்பு:
கூட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம்...!!
”ஒரே-நாடு, ஒரே தேர்தல்” உள்ளிட்ட பிற 4 விவகாரங்களில் என்னதான் மாற்றுக்கருத்து இருந்தாலும் அதை டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் போய் நீங்கள் முன்வைத்திருத்தால், உங்களின் கருத்து இன்னும் விரிவாய் தேசிய அளவில் விவாதத்திற்கு வந்திருக்கும். “ராகுலும்-மோடியும்” “மோடியும்-ஸ்டாலினும்” காரசார விவாதம் என்று செய்திகள் வெளியாகியிருக்கும்.. என்னதான் விவாதம் நடந்தது என்று பொதுமக்களும் கவனித்திருப்பார்கள். உங்கள் கட்சியின் நிலைப்பாடு,அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்று முடிவெடுப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.. கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவேண்டும் என்பதே தமிழக,இந்திய குடிமகனாக எனக்குள்ள சிறு எதிர்பார்ப்பு..!! 

இப்ப  ஒரு குட்டிக்கதை..!!
“...ஒரு பெரிய நதியின் மீதுள்ள பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாலத்தை அகலப்படுத்தலாம், ஒருவழிப்பாதையாக்கலாம், கூடுதலாக ஒரு பாலம் கட்டலாம் என்று பல யோசனைகள் விவாதிக்கப்பட்டன. ஆனால் ஒருவர் சொன்னாராம்... ஏன் இவ்வளவு சிரமப்படணும்..இந்த நதிதானே பிரச்னை; நதியின் போக்கை மாற்றி வேறுவழியில் விட்டுவிட்டால் பிரச்னையே இல்லையே. !!”   ”ஒரே நாடு-ஒரே தேர்தல்” குறித்து யோகேந்திரா யாதவ் சொன்ன கதை இது..!! 

-செந்தில் ஆறுமுகம்
20-06-2019
20.06.2019

Thursday, 21 March 2019

காங்கிரஸ்,பி.ஜே.பியின்..கல்வி அரசியல்..!!

கல்விக்கு நிதி ஒதுக்கீடு... -‘ஆறு’ என்ன ராசி நெம்பரா? - எத்தனை காலம்தான் ஏமாற்றப்போகிறார்கள்?

செந்தில் ஆறுமுகம், சமூக செயற்பாட்டாளர்
March 2019, junior vikatan
“கல்வி குறித்து காங்கிரஸின் கொள்கை என்ன?” சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், மாணவிகளுடன் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலில் அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி இதுதான். நிறையப் பேசியவர், “கல்விக்காக இந்திய அரசு ஒதுக்கும் தொகை மிகக் குறைவாக இருக்கிறது. இது அதிகரிக்கப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறு சதவிகிதம் நிதி ஒதுக்குவோம்” என்று பதில் அளித்தார். அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகிதத் தொகையைக் கல்விக்காக ஒதுக்குவோம் என்று சொல்லிக் கைத்தட்டல் பெற்றார் ராகுல் காந்தி. இந்தப் பதிலைக் கேட்கும்போது நல்ல விஷயம்தானே என்று தோன்றும். ஆனால், இன்னொரு கேள்வியை அந்த மாணவி கூடுதலாகக் கேட்டிருந்தால், ராகுல் காந்தி தர்மசங்கடத்தில் நெளிந்திருப்பார். என்ன கேள்வி அது? ‘இந்தியாவை ஐம்பது ஆண்டுகளுக்கும்மேல் ஆட்சி செய்த காங்கிரஸ், தனது ஆட்சிக் காலங்களில் கல்விக்காக 
ஜி.டி.பி-யில் எத்தனை சதவிகிதம் ஒதுக்கியது, கடந்த காலங்களில் நீங்கள் கொடுத்த வாக்குறுதியின்படி ஆறு சதவிகிதத்தை ஏன் ஒதுக்கவில்லை?” என்பதே அந்தக் கேள்வி!
ராகுல் காந்தியிடம் இந்தக் கேள்விக்கு பதில்பெற முடியாமல் போய்விட்டது. சரி, நாமே பதில் தேடுவோம். அது ஒன்றும் பிரமாதமான காரியமில்லை. காங்கிரஸ் கட்சியின் இணையதளத்திலேயே புள்ளிவிவரங்களுடன் பதில் இருக்கிறது. மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி வகித்த பத்து ஆண்டுகால (2004-2014) ஆட்சியில் 2004 முதல் 2012 வரையிலான ஒன்பது ஆண்டு காலத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட சராசரி சதவிகிதம் ஜி.டி.பி-யில் 3.3 சதவிகிதம் மட்டுமே. அதிலும், 2004-ல் 3.29 சதவிகிதமாக இருந்ததை 2012-ல் 3.83 சதவிகிதமாக உயர்த்தியதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது காங்கிரஸின் இணையதளம். அதாவது, 0.54 சதவிகிதம் உயர்த்தியதைப் பெருமையோடு குறிப்பிடுகிறது. ஆனால், 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் வாக்குறுதியாக, ‘குறைந்தபட்சச் செயல்திட்டத்தில் கல்விக்காக ஆறு சதவிகிதம் நிதி ஒதுக்குவோம்’ என அந்தக் கட்சி கொடுத்த வாக்குறுதி, அன்று என்ன ஆனது? 

காங்கிரஸுக்கு இது ஒன்றும் புதிது அல்ல... 1996 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் கொடுக்கப்பட்ட பலவகையான வாக்குறுதிகளிலும், ‘ஆறு சதவிகிதம் நிதி ஒதுக்குவோம்’ என்றே சொல்லிவந்திருக்கிறது காங்கிரஸ். புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள், ‘அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’ என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால், இந்தியாவை அதிகபட்ச காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி, ‘எங்கள் இலக்கு ஆறு சதவிகிதம்’ என்று சொல்லும்போதுதான் அது விவாதத்துக்கும், கேள்விக்கும் உரியதாகிறது.

காங்கிரஸ் மட்டுமல்ல... பி.ஜே.பி-யும் அச்சுப்பிசகாமல் இதையேதான் வழிமொழிகிறது. 1999 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் வாஜ்பாய் இதே ஆறு சதவிகித வாக்குறுதியைக் கொடுத்தார். நிறைவேற்றவில்லை. 
 2014-ல் மோடியும் இதே வாக்குறுதியைக் கொடுத்தார். நிறைவேறவில்லை. சரி, அது என்ன ‘ஆறு’? ஏதேனும் ராசி நெம்பரா! இதனைப் புரிந்துகொள்ள 1966-ம் ஆண்டை நோக்கிப் பயணப்பட வேண்டும். கல்வியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கோத்தாரி தேசியக் கல்வி குழுவானது 1966-ல் தாக்கல்செய்த  713 பக்க அறிக்கையில், ‘கல்விக்காக ஜி.டி.பி-யில் ஆறு சதவிகிதம் ஒதுக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்தது. இதனை அடிப்படையாகக்கொண்டே அனைத்துக் கட்சிகளும் ‘ஆறு’ என்கிற மேஜிக் எண்ணைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். பரிந்துரை 53 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுதான் நம் ஆட்சியாளர்களின் லட்சணம். இடையே 1976-ல் இந்திரா காந்தியின் எமர்ஜென்சியின்போது 42-வது அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் கல்வி, மாநிலங்களின் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு (மத்திய - மாநில அரசுகள் இணைந்து கையாளும் பட்டியல்) மாற்றப்பட்டது; இப்படி கல்வியை மாநிலங்களின் உரிமையிலிருந்து பறித்தது தனிக் கதை.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் முன்னால் பரிந்துரைக்கப்பட்ட ஆறு சதவிகிதம் இன்றையச் சூழலுக்கும் போதுமா... இல்லை, பொருந்துமா? எத்தனையோ திட்ட மதிப்பீடுகள் ஆண்டுக்கு ஆண்டு பட்ஜெட் உயர்ந்து கொண்டிருக்கும்போது, கல்விக்கு இன்றும் அதே ஆறு சதவிகிதத்தைக் குறிப்பிடுவது சரிதானா? சரி... சொன்னதையாவது காங்கிரஸும் பி.ஜே.பி-யும் செய்தனவா? இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இன்னும் எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றப் போகிறார்கள்?




கருத்து பகிர:
87545-80274
sentharu@gmail.com

Monday, 28 January 2019

JACTTO GEO - FAQ - ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் விளக்கங்கள்/நிலைப்பாடுகளும்

                       ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளும்
  சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் விளக்கங்கள்/நிலைப்பாடுகளும் 

கோரிக்கை 1.  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்(CPS திட்டம்) ரத்து செய்யப்பட்டு பழைய பென்சன் திட்டம் கொண்டுவரப்படவேண்டும்.

1.1  CPS திட்டத்தின் நடைமுறைகள் தமிழக அரசால் தெளிவாக வரையறுக்கப்படவேண்டும். வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
1.2 CPS திட்டத்தில் இதுவரை சேர்ந்துள்ள நிதி எங்கிருக்கிறது, எப்படிக் கையாளப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை வெளியிடவேண்டும். இதை நாளிதழ் விளம்பரமாகவும் வெளியிட வேண்டும்

1.3 CPSல் சேர்ந்துள்ள நிதியை தமிழக அரசு உடனடியாக PFRDAவில் செலுத்தவேண்டும். இவ்வளவு ஆண்டுகள் செலுத்தப்படாமல் இருந்ததற்கு காரணங்களை விளக்கவேண்டும்.

1.4 CPS திட்டம் அமலான பிறகு(01.04.2003) பணிக்கு சேர்ந்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் கிடைக்காது என்ற விதிமுறையை ஏற்றுக்கொண்டே பணிக்கு சேர்கிறார்கள்

1.5  பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்ந்தால் மாநில அரசின் நிதிச்சுமை மோசமாகிவிடும் என்ற காரணத்தால் மத்திய அரசு, ஓரிரு மாநிலங்களைத் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்புவது என்பது நிதி-சாத்தியமற்றது(Financially not viable)