Friday, 22 January 2016

அரிவாளைத் தேர்ந்தெடுக்கும் ஆடுகள்...

23-01-2016:


நேற்றைய தந்தி டிவி நிகழ்ச்சியில்(மக்கள் யார் பக்கம்) இரண்டு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு அதுகுறித்து விவாதம் நடந்தது. நானும், எழுத்தாளர் ஆழி செந்தில்நாதனும்(பச்சைத் தமிழகம் கட்சி) கலந்துகொண்டோம்.
முதலில் கருத்துக்கணிப்பு முடிவுகள்:
1.தமிழக அரசியலுக்கு புதுமுகங்கள் அவசியமா?
90% - ஆம் ; 7% - இல்லை ; 3% கருத்துகூற விரும்பவில்லை
2.தமிழக அரசியலில் சாமான்யர்களுக்கு இடமிருக்கிறதா?
77% - இல்லை ; 23% - ஆம்
எனக்குக் கிடைத்த வாய்ப்பின்போது முன்வைத்தவை:
- 1987க்கு பிறகு நடந்த 6 தேர்தல்களிலும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாற்றத்தை அடைந்ததுதான் மிச்சம். 1989,1991,96,2001,2006,2011 ஆகிய ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆளுங்கட்சியாக இருந்த கட்சி தோல்வியுற்று எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. இந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பி வாக்களித்ததைவிட, ஆளுங்கட்சியாக உள்ள கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று “எதிர்மறையாக” வாக்களித்தவர்கள்தான் அதிகம்.
- எளியமக்களின் பார்வையில் அரசியல் என்பது “கோடிகள், கேடிகள்” சம்பந்தப்பட்டது என்ற நிலைக்குப் போய்விட்டது.
- புதிய அரசியல் கலாச்சாரத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்றளவும் சாதி அரசியல் என்பது புரையோடிப்போயுள்ளது.
“நிரந்தர பொதுச்செயலாளரைத்” தேர்ந்தெடுக்க!! பொதுக்குழு நடத்தும் போக்கு, குடும்ப அரசியல் போன்ற ஜனநாயகப் படுகொலைகளைப் பார்த்து மக்கள் வெறுத்துப்போயுள்ளனர்.
- முகநூல், வாட்ஸ் அப்பில் விவாதித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சகாயம்.ஐ.ஏ.எஸ் அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று வீதியில் இறங்கி பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது தமிழக மக்கள் # எங்கே_என்_தலைவன் என்று வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் வெளிப்படையாகக் காட்டுகிறது.
- அடுத்த தேர்தல் பற்றி சிந்திப்பவன் - அரசியல்வாதி;
அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பவன் -தலைவன்.
தமிழகத்தில் எக்கச்சக்க அரசியல்வாதிகள் உண்டு. தலைவனைத்தான் காணவில்லை.
கடந்த 6 தேர்தல்களில் மாத்தி-மாத்தி ஓட்டுப்போட்ட மக்களின் நிலையைப் பார்க்கும்போது இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது..
தேர்தல் வருகிறது.
இந்த ஆடுகளுக்கு மகிழ்ச்சி.
எதற்காக..?
எந்த அரிவாளால் இவர்களை
வெட்டிக்கொள்ளலாம் என்று
அரிவாளைத் தேர்ந்தெடுக்க
இவர்களுக்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டதாம் !! ??
இனிமேலும் நாங்கள் அரிவாளைத் தேர்ந்தெடுக்கும் ஆடுகளாக இருக்கமாட்டோம் என்ற அடிப்படையில் ”அரசியலில் புதுமுகங்கள் வேண்டும்” என்று 90% மக்கள் வாக்களித்திருப்பது, புதிய அரசியல் கலாச்சாரம் விரைவில் மலரும் என்ற நம்பிக்கையளிப்பதாக உள்ளது... அந்த நம்பிக்கையோடு, பயணத்தைத் தொடர்வோம்..

Saturday, 16 January 2016

சிலை மனிதனும்.. பஸ் டிரைவரும்...

சிலை மனிதனும்.. பஸ் டிரைவரும்... 16-01-2016
பேருந்து எண்: 95. திருவான்மியூர் – தாம்பரம் பயணம். பேருந்து அதிவேகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில்(OMR) விரைகிறது. பேருந்தின் வேகத்தைப் பார்த்து, உள்ளே இருந்தவர்களுக்கு விபத்து நடந்துவிடுமோ என்ற அச்சம். குடும்பத்துடன் நானும் ஒரு பயணியாக. ஓட்டுனருக்கு பின்னே நான்காவது வரிசை இருக்கையில் அமர்ந்தவண்ணம் ஓட்டுனரின் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டே வருகிறேன்.

நடுத்தரவயதுமிக்க அந்த ஓட்டுனர், ஒரு இளைஞனுக்கு உரித்தான உற்சாகத்தோடு இருந்தார். ஓட்டுனரை பின்னால் இருந்தபடியே புகைப்படம் எடுத்தேன். அந்த ஓட்டுனரின் உற்சாகம்… அவர் பேருந்தை ஓட்டிய வேகம்… ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் ஸ்டைலாக வண்டி நிறுத்தியவிதம்.. கடந்த செல்லும் மற்றோரு பேருந்து ஓட்டுனரிடம் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டவிதம் அனைத்தும் ஒரு கற்பனைக் கதையை நினைவுபடுத்தியது…

“சிலையாக இருந்த மனிதன் ஒருவனுக்கு உயிர்பெற்று வாழும் வரம் கிடைத்தது. நீண்டகாலம் சிலையாக இருந்தவன், உயிர்பெற்றவுடன் முதன்முதலாக என்ன செய்வான்..? சுவையான உணவுதேடுவானா..? பிரிந்துசென்ற மனைவி-மக்களைத் தேடுவானா..? நீண்டகாலம் கால்கடுக்க சிலையாக நின்றவன் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுப்பானா..? என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருந்தான் வரம் கொடுத்தவன்.

சிலையாக இருந்தவன், மனிதனாக மாறியவுடன் அருகில் இருந்த மரத்தில் ஏறினான். ஒரு காக்கையைப் பிடித்தான். பின்னர் அவசரமாக மரத்தின் கீழிருந்த புதருக்குள் சென்றான். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்தோடு வரம்கொடுத்தவனும் பின்னலே சென்றான்.

சிலை மனிதன், அந்த காக்கையை தன் காலால் அழுத்திப்பிடித்துக்கொண்டு அதன்மீது முதலில் சிறுநீர் கழித்தான்.. பின்னர் மலம் கழித்தான்..
வரம் கொடுத்தவன் அதிர்ச்சியடைந்தான்.

பலவருடம் சிலையாக இருந்த நீங்கள் உணவு, உறவுகள், ஓய்வு இதை நோக்கிச் செல்வீர்கள் என்று நினைத்தேன்.. ஆனால், நீங்கள் இப்படி…. …? சுயநினைவோடுதான் செய்தீர்களா..?

நான் மீண்டும் மனிதனாகும் வரம்கொடுத்தமைக்கு நன்றி.. நீங்கள் சொன்னபடி உணவு, உறவுகளை நோக்கித்தான் போகப்போகிறேன்.. ஆனால், அதற்கு முன்னர் என் தலைமேல் இத்தனை ஆண்டுகள் தினந்தோறும் எச்சம் கழித்த காக்கை மீதுள்ள கோபத்தைத் தணித்துக்கொள்ளவே அவ்வாறு செய்தேன். இப்போது, கோபம் அடங்கிவிட்டது. என் வீட்டுக்குச் செல்கிறேன்.. நன்றி..

அடக்கப்பட்ட உணர்வுகள் எப்படி உணர்ச்சிபூர்வமாக வெளிப்படும் என்பதை உணர்த்தும் கற்பனைக் கதை இது.

IT கம்பெனிகள் நிறைந்த OMR சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பிரேக்கையும், கியரையும் மாறி மாறி அழுத்திக்கொண்டிருந்த ஓட்டுனருக்கு… நெரிசல் இல்லா சாலை- பயணிகள் யாரும் இறங்காத சில நிறுத்தங்கள் போன்றவற்றைக் கண்டவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி. அந்த சிலைமனிதனுக்கு காக்கை மீது எவ்வளவு கோபமோ.. அதுபோல், வருடக்கணக்கில் பிரேக் கட்டையை மட்டுமே அழுத்தி-அழுத்தி ஓட்டிய அந்த ஓட்டுனருக்கு ஆக்சிலேட்டரை ஒருநாளாவது ஆசைதீர மிதித்துவிடவேண்டுமென்ற உணர்வு மேலோங்கி இருந்தனை உணரமுடிந்தது.

நான் புகைப்படம் எடுத்ததைப் பார்த்த நடத்துனர் என்னருகில் வந்து “…சார், ரோடு காலியா இருக்குது, அதான் வேகமா ஓட்டுறார் வேறோன்னும் இல்லை. எப்பவுமே இப்படி ஓட்டமாட்டார் சார்” என்று நான் கேட்காத கேள்விக்கு விளக்கமாக விடையளித்தார். செம்பாக்கம் வந்துவிட்டது. புகார் ஏதேனும் கொடுத்துவிடுவேனோ என்ற அச்சத்தில் என்னருகிலேயே நின்றுகொண்டு ஏதேதோ பேசிக்கொண்டுவந்த நடத்துனரிடம், சிரித்துகொண்டே “..ஓட்டுனரை, பார்த்து கவனமா ஓட்டச்சொல்லுங்கனு” சொல்லிட்டு பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன்.

ஏதோ தெரியவில்லை, இன்று அந்த ஓட்டுனர் மீது புகார் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை !!. அவரின் ஒருநாள் உற்சாகம், வேகம் எந்த உயிரையும் பலிவாங்காமல் இருந்தால் சரி..

Thursday, 14 January 2016

தை திருநாளும்...தண்ணீரும்

நண்பர்களே,
தை திருநாளை தண்ணீருக்கான தீர்வை நோக்கிய சிந்தனையிலிருந்து தொடங்க விரும்புகிறேன்..


5 questions to friends those who reside in foreign countries, reg quality of tap water coming in your home. It will help me to understand the drinking water distribution system there. தமிழ்நாட்டில் தண்ணீர் வியாபாரம் அபாரமாக, அபாய நிலையில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.. இதுகுறித்து யோசித்துவருகிறேன்.. வெளிநாடுகளில் இது எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முயல்கிறேன். வெளிநாடுகளில் வசிக்கும்/வசித்த நண்பர்களுக்கு 5 கேள்விகள்..?
1. Before drinking, Do you heat the water coming in your home tap ?
2. Do you use RO inside your home?
3. Do you know the process being followed by Govt or your apartment community to ensure quality drinking water..?
4. Do you use the home tap water for cooking or buying some other water.?
5. Are you satisfied with the quality of water coming in your home tap. Do you get water daily.. How many hours daily..?
1. உங்கள் வீட்டுக்குழாய்களில் வரும் தண்ணீரை சூடுபடுத்தித்தான் குடிக்கிறீர்களா..?.
2. வீட்டுக்குழாயில் வரும் தண்ணீரை சுத்திகரிக்க வீட்டுக்குள் RO,Aquaguard போன்ற தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களைப் பயன்படுத்துகிறீர்களா.?
3. அரசாங்கம்/உங்கள் அபார்ட்மெண்ட் சுத்தமான குடிநீரை வழங்க கடைபிடிக்கும் வழிமுறைகள் என்ன என்பது தெரியுமா?
4. சமைப்பதற்கும் வீட்டுக்குழாய் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்களா.. இல்லை பாட்டில்,கேன் தண்ணீரை விலைக்கு வாங்குகிறீர்களா..?
5. உங்கள் வீட்டுக்குழாயில் தரமான தண்ணீர் வருகிறது என்ற திருப்தி உங்களுக்கு இருக்கிறதா..? தினமும் தண்ணீர் வருமா? எத்தனை மணிநேரம் வரும்..?

செந்தில் ஆறுமுகம்.
15-01-2016

Saturday, 9 January 2016

“கண்ணியமான தேர்தலும்-சமூகமும்”..Electoral Integrity



நேற்று நடைபெற்ற “கண்ணியமான தேர்தல்” நிகழ்ச்சியின்போது “கண்ணியமான தேர்தலும்-சமூகமும்” என்ற தலைப்பில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக 10நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது... எப்போதோ வாட்ஸ் அப்பில் படித்த கதை ஒன்று பேச்சின்போது உதவியாக இருந்தது..
“கணவன் - மனைவி-2 குழந்தைகள் உள்ள வீடு அது. வீட்டிற்கு தபால் ஒன்று வருகிறது. அன்று ரிலீசான புதுப்படத்திற்கு 4 டிக்கெட் உள்ளே.. இரவு செகண்ட் ஷோவிற்கு.. சரியாக 4 டிக்கெட் அனுப்பியது யார் என அவர்களுக்குத் தெரியவில்லை.. அனைவருக்கும் ஆச்சரியம். யார் அனுப்பியிருந்தால் என்ன, நல்லபடம், முதல் நாள், டிக்கெட் இலவசம்.. என மகிழ்ச்சியோடு குடும்பத்தினர் படத்திற்கு சென்றனர்.. படம் முடிந்து நள்ளிரவில் வீடுதிரும்பியபோது அதிர்ச்சி..பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் ஒருபொருளும் இல்லை. அனைத்து பொருட்களும் களவாடப்பட்டிருந்தது. ஒரு துண்டுத்தாள் ஹால் நடுவே கிடந்தது. எடுத்துப் படித்தார்கள்..
“...பூட்டை ஈசியாக உடைக்க முடிந்தது.. பீரோ மட்டும் உடைப்பதற்கு சிரமமாக இருந்தது. நாங்கள் அனுப்பிய டிக்கெட்டை பயன்படுத்தி உதவியமைக்கு நன்றி..”
களவாடப்பட்ட குடும்பம் வேறு யாருமல்ல. ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகம்தான். அக்குடும்பத்திற்கு கிடைத்த டிக்கெட்டுகள் போல, சில ஆயிரம் ரூபாய்களுக்கும், பரிசுப்பொருட்களுக்கும் ஆசைப்பட்ட நம் ஓட்டை விற்கிறோம்.. டிக்கெட் அனுப்பியர்வர்கள் வீட்டை களவாடியதுபோல், இலவசங்கள் கொடுத்தவர்கள் நாட்டைக் களவாடுகிறார்கள்..பொதுச்சொத்தை சூறையாடுகிறார்கள்..
இலவசமாய் ஒரு பொருள் கிடைக்கிறது என்றால் நம்மை யாரோ ஏமாற்ற நினைக்கிறார்கள் என்று சமுதாயம் உணரும்போது “கண்ணியமான தேர்தல்” சாத்தியமாகும்.
சகாயம்.ஐ.ஏ.எஸ், தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, தேவசகாயம்.ஐ.ஏ.எஸ்(ஓய்வு), முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி ஆகிய தமிழகத்தின் முக்கிய நபர்கள் பேசிய மேடையில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்திற்கும் வாய்ப்பு கிடைத்தது என்றால் அது இயக்கத்தின் சமூகப் பணிகளுக்குக் கிடைத்த சிறு அங்கீகாரமாகவே கருதுகிறோம்..
வாய்ப்பளித்த “கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பின்” ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி..

Friday, 1 January 2016

நண்(ம்)பர் 4000.. வருக..

1-1-2016:
நண்பர் 4000..
அறப்போர் போராளிகளைப் பற்றிய இன்றைய பதிவு 2150 பகிர்வுகளைத்(Shares) தாண்டியது... என்பது இளைய(இணைய) சமுதாயம் ஆளுங்கட்சி நடத்தும் அட்டூழியங்களின் மீது எவ்வளவு கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.
பணபலம் ஏதுமில்லா எங்களைப் போன்ற எளிய சமூகப் பணியாளர்களுக்கு,மக்கள் இயக்கங்களுக்கு முகநூல் என்பது யானை பலம். கருத்தை, போராட்டத்தை பரப்புவதற்கு - வேண்டிய உதவியைப் பெறுவதற்கு இந்த முகநூல் செய்துள்ள உதவி சொல்லிமாளாது. இதற்கு சமீபத்திய உதாரணம் அறப்போர் போராட்டம். அச்சு,காட்சி ஊடகங்களைவிட சமூக ஊடகங்கள் மூலம்தான் அறப்போர் செய்தி அதிகம் பரவியிருக்கும் என்று நம்புகிறேன்.
முகநூலில் இன்று இணைந்த 75 புதிய நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இணைந்து செயல்படுவோம்.. இந்த 75 நண்பர்களில் யாரோ ஒருவர் 4000மாவது நண்பராக இணைந்துள்ளார்.. புத்தாண்டு தினத்தன்று இணைந்த நண்(ம்)பர் 4000 அவருக்கு சிறப்பு வணக்கம்...வருக !!

2016: முகநூல் முதல் பதிவு -அறப்போர் போராளிகள் கைது

01-01-2016:
முகநூலில் புத்தாண்டின் முதல் பதிவாக எதை எழுதலாம் என்று யோசித்து முடிக்கும் முன்பே சட்டவிரோத பேனரை அகற்றி சிறை சென்ற அறப்போர் இயக்கத்தின் மூன்று தோழர்களின்(ஜெயராம்,சந்திரமோகன், அத்தர்) வீரத்தை, தியாகத்தை எழுதுவதை விட வேறு என்ன இருக்க முடியும் என முடிவுக்கு வந்துவிட முடிந்தது..
சராசரி மனிதர்கள்
புத்தாண்டை எப்படிக்
கொண்டாடுவது
என்று சிந்தித்தார்கள்..
இந்த சமூகப் போராளிகள்
புத்தாண்டை சிறையில்
சந்தித்தார்கள்..



இரவு சைதாப்பேட்டை மருத்துவமனையில் மூவருக்கும் மருத்துவ சோதனை முடிந்து புழல் சிறைக்கு கிளம்பியபோது அத்தர் எங்களிடம் கூறிய வார்த்தைகள் “....இது ஒரு புதிய தொடக்கம்”..
ஆம், சட்டத்தின் ஆட்சியை அரசு அமல்படுத்தவில்லை என்றால், எல்லையற்ற அராஜகத்தை அரசு வேடிக்கை பார்க்கும் என்றால்,
ஆட்சியில் உள்ள கட்சி தமிழகத்தை குத்தகைக்கு எடுத்தவர் போல் சண்டித்தனம் செய்தால்....
பொதுநலன் கருதி, மக்களே களமிறங்கி அராஜகத்திற்கு முடிவுகட்டுவார்கள் என்பதை கண் முன்னே செய்து காட்டிய அத்தர் சொன்ன வார்த்தை ஆழமானது...
டிராபிக் ராமசாமி என்ற மூத்த போராளி தனிமனிதனாக செய்துவந்ததை அறப்போர் இயக்கத்தின் “இளைய போராளிகள்” செய்திருப்பது... “ஒரு புதிய தொடக்கம்”...
இது தொடரவேண்டுமா இல்லையா என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்யட்டும்..