Sunday, 6 March 2016

வளர்ச்சி அரசியலா? வார்த்தை அரசியலா?

தினமலரில்(தேர்தல் களம் பகுதியில்) - மார்ச் 6,2016

வளர்ச்சி அரசியலா? வார்த்தை அரசியலா?


கடந்த, 1957 சட்டசபைத் தேர்தல் களம். காஞ்சிபுரத்தில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். அனல் பறக்கும் பிரசாரத்தின் இறுதிக்கட்டம். தொகுதியில் அண்ணாவிற்குப் பெருகும்ஆதரவு கண்ட, குறிப்பிட்ட ஒரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், அண்ணாதுரையை கீழ்த்தரமான வார்த்தைகளால் அர்ச்சிக்கும் விதமாக ஒரு பெரிய அட்டையை, அவர் வீட்டுக்கு எதிரில் வைத்துச் சென்றனர்.
கோபத்தில் கொப்பளித்த தி.மு.க., தொண்டர்கள், அட்டையை வைத்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூக்குரலிட்டனர்.அப்போது அண்ணாதுரை, 'யார் மீதும் எந்த நடவடிக்கை யும் தேவையில்லை. உடனே ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு கொண்டு வாங்க' என்றார். குழம்பிப் போன தொண்டர்கள், 'எதற்கு?' என்று கேள்வி எழுப்பினர்.'தெருவிளக்கு இல்லாததால், இந்த அட்டையை பகலில் மட்டும் தான் படிக்க முடியும். பெட்ரோமாக்ஸ் விளக்கு வைத்தால், இரவிலும் படிக்க முடியுமே' என்று கூறி, பெட்ரோமாக்ஸ் விளக்கை, அந்த அட்டை அருகே வைத்தார்.அட்டையை வைத்தோர், ஓரிரு நாளில், அவர்களாகவே அகற்றி விட்டனர்.
அன்று, எதிர்க்கட்சிகள் தன் மீது நடத்திய தனிநபர் கருத்துத் தாக்குதல்களை அண்ணாதுரை எதிர்கொண்ட விதம் அப்படி. ஆனால், அவரால் துவக்கப்பட்ட கட்சியும், அவரது பெயரைத் தன் பெயரிலேயே வைத்திருக்கும் கட்சியும், எதிர்க்கட்சி அரசியலை 'எதிரிக்கட்சி' அரசியலாக நடத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கும் பொதுமக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் வெறுத்துப் போயுள்ளனர்.ஜெயலலிதாவும், கருணாநிதியும் குட்டிக்கதை மூலம் மோதிக்கொண்டது, இதற்கு சமீபத்திய உதாரணம். ஏணியில் ஏறிய மகனை கவிழ்த்த தந்தை பற்றி ஜெயலலிதா குட்டிக் கதை சொல்ல, 'பிள்ளை குட்டி இல்லாத எதிர்வீட்டு பேராசைப் பெருமாட்டி' பற்றி கருணாநிதி சொல்ல, தமிழக அரசியல்களத்தின் தரம், மீண்டும் ஒருமுறை அதல பாதாளத்தை எட்டியது.கல்வி, விவசாயம், மருத்துவம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கட்டமைப்பு, லஞ்ச -ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு, சுற்றுச் சூழல் மேம்பாடு, நீராதாரங்கள் மேம்பாடு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு, என்ன தீர்வு உள்ளன என்பதை, ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் முன்வைக்க வேண்டும்.தீர்வுகளை எப்படி சாத்தியமாக்கு வோம் என்பதை, அந்த கட்சிகளின்தலைவர்கள், பிரசாரத்தில் எடுத்துரைக்க வேண்டும். 

எந்தத் தலைவர் அல்லது கட்சி முன் வைக்கும் கொள்கைகள், செயல்திட்டங்கள் தங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதோ அந்த கட்சிக்கு மக்கள் ஓட்டகளிக்க வேண்டும். இதுதான் உண்மையான அரசியல். ஆனால், இன்றைய தேர்தல் களம் இப்படியா இருக்கிறது...?
'ஓட்டுக்குப் பணம்; வீட்டுக்கு இலவசம்பசிக்கு பிரியாணி; பிரசாரத்திற்கு பிராந்தி'

இவை தான், தேர்தலின் பிரதான கோஷங்கள்.சினிமா நட்சத்திரங்கள் போன்ற 'பிரபல'ங்களையும், பணம், -அடியாள் பலம் போன்ற, 'பிற பல'ங்களையும் நம்புமளவுக்கு தங்கள் கொள்கை, கோட்பாடுகளின் மீது கட்சிகள் நம்பிக்கை வைக்காதது ஜனநாயகத்திற்குப் பெரும் தலைகுனிவு. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாயிற்று. கொளுத்தும் வெயிலில் அலைந்து திரிந்து கோட்டையைப் பிடிக்கும் ஓட்டப்பந்தயம், தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்போடு துவங்கி விட்டது.இந்த முறையாவது தமிழக தேர்தல் பிரசார களம், வளர்ச்சி அரசியலை முன்வைக்கப் போகிறதா அல்லது வழக்கம் போல் எதிர்க்கட்சிகளை வசைபாடும் வார்த்தை அரசியலை முன்வைக்கப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- செந்தில் ஆறுமுகம்
கட்டுரையாளர், மாநில பொதுச் செயலர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 

Email முகவரி:  sentharu@gmail.com

No comments:

Post a Comment