Friday, 21 September 2018

Unresolved problems in Society? நாட்டில் தீர்க்க முடியாத பிரச்னைகள் எவை ?

புதிய தலைமுறை வார இதழில்( மக்கள் கேள்விகள் - பிரபலங்கள் பதில்கள் பகுதியில்) கேட்கப்பட்ட ‘நாட்டில் தீர்க்க முடியாத பிரச்னைகள் எவை”? என்ற கேள்விக்கு என்னுடைய பதில் ( செப் 27, 2018)



நாட்டில் தீர்க்க முடியாத பிரச்னைகள் எவை..?
- செந்தில் ஆறுமுகம்
தீர்க்க முடியாத பிரச்னைகள் என்று பலவற்றைப் பட்டியலிடலாம். ஆனால், அவற்றைத் தீர்க்க ”முடியாத” பிரச்னைகள் என்று அழைப்பதை விட, ஆட்சியாளர்கள் தீர்க்க “முயலாத” பிரச்னைகள். என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். அவர்கள் தீர்க்க “விரும்பாத” பிரச்னைகள் என்று சொல்வது இன்னும்கூடப் பொருத்தமாக இருக்கும்.
பள்ளிக்கல்விக்கு மட்டும் தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம்கோடியைச் செலவழித்தும், இன்னும் கணிசமான பிள்ளைகளின் பெற்றோர்கள் கடன் வாங்கியாவது தனது பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் படிக்கவைக்க முற்படுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் ஒரு அவலம். ஆட்சியாளர்கள் பல்லாண்டுகளாய் தீர்க்க “முயலாத” பிரச்னை இது.
பாதி உயிர் போயிருந்தாலும் கோடிகளைக் கொட்ட வழியிருந்தால், காப்பாற்றி விடலாம். அதேசமயத்தில், அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லை என்றால் தீவிர சளித்தொல்லையால் பாதிக்கப்பட்டவன்கூட சவமாய்ப் போவதற்கு சாத்தியம் இருக்கிறது. ரயிலில் முன்பதிவில்லாத பெட்டி, உட்கார்ந்து செல்லும் - தூங்கும்வசதியுடைய - குளிர்சாதன வசதிகொண்ட பெட்டி எனப் பலவகைகள் இருப்பதுபோல் ஒவ்வொருவரின் கையில் உள்ள காசைப் பொறுத்தே இங்கு மருத்துவ சேவை கிடைக்கும் என்ற கொடுமை அடித்தட்டு மக்களைப் பொருத்தவரை ஒரு மிகமுக்கியமான பிரச்னை; ஆட்சியாளர்கள் தீர்க்க “முயலாத” பிரச்னை.
இப்படி மக்கள் ஒவ்வொருவருக்கும் அவசியம் கிடைக்க வேண்டிய தரமான கல்வியும், மருத்துவமும் ஏழைக்கு எட்டாக்கனியாக நிற்கும் சூழலில் உடலை உருக்கி, உயிரைக்குடிக்கும் சாராயம் மட்டும் தெருவெங்கும் தாராளமாய்க் கிடைக்கிறது. அரசு சம்பாதிக்கும் ஒவ்வொரு 100ரூபாய் வரிப்பணத்தில் 27 ரூபாய் டாஸ்மாக் கடைகள் மூலம் சம்பாதிக்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயமா என்ன ?. மக்களை மெல்லக்கொல்லும் விஷயத்தை அரசாங்கமே தாராளமாய் சப்ளை செய்வது கொடுமையிலும், கொடுமையான பிரச்னை. ஆட்சியாளர்கள் தீர்க்க “விரும்பாத” ஒரு பிரச்னை.
“விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு” என்று மேடைதோறும் முழங்குவார்கள். ஆனால், அவனுக்கு பயிரைப் பாதுகாக்கத் தேவையான நேரத்தில் பாசன நீர் கிடைக்காது, அவன் முதுகொடித்து பயிர் செய்த விளைபொருளுக்கு விலை கிடைக்காது, வெள்ளமோ-வறட்சியோ பயிரைக் காவு வாங்கினால் காப்பீடு முறையாகக் கிடைக்காது, நவீன தொழில்நுட்பங்கள் எதுவும் இவனின் வயல்வரை வந்துசேராது. இப்படி, நாட்டுக்குப் படியளப்போரின் நிலை பரிதாபமாக உள்ள பிரச்னை என்றும் தொடரும் ஒரு தீர்க்க “முயலாத” பிரச்னை.
”காவல்துறை மக்களின் நண்பன்” என்று எத்தனை முறை, எங்கு எழுதிவைத்தாலும் உண்மையில் ”காவல்துறை,” அதிகாரமும்-பணபலமும் உள்ளவர்களுக்கே” நெருங்கிய நண்பன்” என்ற எழுதப்படாத சட்டத்தை அச்சுப்பிசகாமல் பின்பற்றும் காவல்துறையின் போக்கு நீண்ட நெடிய ஆண்டுகளாக உள்ள ஒரு தீர்க்க “முயலாத” பிரச்னை.
சகமனிதனை இழிவுபடுத்தும் ”சாதி”க்கொடுமைகளுக்கு எதிராக, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பெரும்போர் புரிந்த பெரியார் மண்ணில் இன்னும் சாதிக்கொடுமைகளும், சாதிக்கலவரங்களும், மூட நம்பிக்கைகளுக்கும் விடாது தொடர்கிறது. ஜனநாயகத்தின் அடிநாதமான தேர்தல் காலங்களில் சாதிப்பேய் தலைவிரித்தாடுவதும், ஓட்டுவங்கிக்காக சாதிப் பிரிவினைகளை அரசியல் கட்சிகள் நீரூற்றி வளர்ப்பதும், ஆட்சியாளர்கள் என்றும் தீர்க்க “விரும்பாத” பிரச்னை.
”விடியாத இரவென்று எதுவுமில்லை; முடியாத பகலென்று எதுவுமில்லை”.
அதுபோல, தீர்க்க முடியாத பிரச்னைகள் என்று எதுவும் இல்லை. பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய ஆட்சியாளர்கள் அவைகளை வளர்த்தெடுக்கிறார்கள் அவ்வளவுதான்.
இலஞ்ச-ஊழலில் ஊறித்திளைத்து, அனைத்துத் துறைகளையும் சீரழித்துப் பயிரை மேயும் வேலியாகிறார்கள். பிரச்னைகளைத் தீர்க்காத ஆட்சியாளர்களைத் திரும்பத் திரும்ப நாம் தேர்ந்தெடுக்கிறோம்..!! ஏன் ? எவ்வளவு காலம் இப்படியே தொடரப்போகிறோம்? என்று வாக்களிக்கும் ஒவ்வொருவரும் யோசிக்கத் தொடங்கிவிட்டால், மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க ”முயலாதவர்கள்” மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்ற நிலைவந்துவிட்டால், நீண்டகாலமாகத் தொடரும் “தீர்க்க முடியாத” பிரச்னைகளுக்குத் தீர்வுகிடைத்துவிடும்.

87545-80274,  sentharu@gmail.com

No comments:

Post a Comment